கணித திறனறிதல் தேர்வு; மாணவர்கள் சிறப்பிடம்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் நடந்த, கணித திறனறிதல் தேர்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், ராமானுஜர் பிறந்த நாளையொட்டி, கோவை மண்டல அளவில் கணித திறனறிதல் போட்டி நடந்தது. உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், சுற்றுப்பகுதியிலிருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 21 மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
இம்மாணவர்களுக்கு கோவையில் நடந்த விழாவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடுமலை சுற்றுப்பகுதி கிராமப்புற மாணவர்களிடம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை உருவாக்கும் முயற்சியில், ஜூன் மாதம், ஒருநாள் அறிவியல் பயிற்சி பட்டறை நடத்தப்படுவதாகவும், அடுத்த கல்வியாண்டில், உடுமலையிலேயே மையங்கள் அமைத்து, கணித திறனறிதல் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.