வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:
மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும்.

பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.