ரோட்டாவைரஸ் தடுப்பூசித் திட்டம் அறிமுகம்

நாடு தழுவிய ரோட்டாவைரஸ் தடுப்பூசித் திட்டத்தை ஒடிஸாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

       ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து நட்டா பேசியதாவது:
          பொதுத் துறை- தனியார் பங்களிப்பு முறையில் மத்திய அறிவியல் மற்றும் சுகாதார, குடும்ப நல அமைச்சகங்கள் மூலம் உள்நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்தது மிகப்பெரிய சாதனையாகும். இந்த தடுப்பூசித் திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூலம் நாடு முழுவதும் சுமார் 27 கோடி குழந்தைகளுக்கு ரோட்டாவைரஸ் தடுப்பூசி போடுவது என உறுதி பூண்டிருக்கிறோம்.
         ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் மத்தியில் கடும் வயிற்றுப்போக்கிற்கும் அதன் காரணமாக இறப்புக்கும் வழி வகுக்கும் பல காரணிகளில் மிகவும் முக்கியமானது இந்த ரோட்டாவைரஸ். இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்வதன் மூலம் வயிற்றுப்போக்கால் குழந்தைகள் இறப்பதை பெருமளவில் தடுக்க இயலும்.
       ரோட்டாவைரஸ் கிருமியால் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன. மேலும் 10 லட்சம் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மிகவும் குறுகிய காலத்துக்குள் கவனத்துடன் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மரணம் சம்பவிக்கும்.
        முதல் கட்டமாக 4 மாநிலங்களில்...: முதல் கட்டமாக ஆந்திரம், ஒடிஸா, ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் இந்தத் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படுகிறது.
      பிறகு படிப்படியாக நாட்டின் எஞ்சிய மாநிலங்களில் இத் திட்டம் தொடக்கப்படும். உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட போலியோ தடுப்பு மருந்து, ரோட்டாவைரஸ் தடுப்பூசி, தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, மூளைக்காய்ச்சல் தடுப்பூசி ஆகிய 4 புதிய மருந்துகள் தற்போது அறிமுகம் செய்யப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் நட்டா கூறினார்.