ஆசிரியர் பணியிடம்; பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிப்பு!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப,தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் பாதியளவு, பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.



இதற்காக, 2016 ஜன., 1ம் தேதியை தகுதியாக கொண்டு, அரசு பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் கொண்ட முன்னுரிமை பட்டியலை தயாரித்து அனுப்ப,அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியில் உள்ள ஆசிரியர்களில், பதவிஉயர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் யாரும் இல்லையென்றால், இன்மை சான்று அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தகுதி பெற்ற ஆசிரியர்கள் பெயர் விடுபட்டு போகும் பட்சத்தில், தலைமை ஆசிரியர்கள் விளக்கம் தர வேண்டியிருப்பதோடு, இயக்குனரகத்தின் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.