மதுரை காமராஜ் பல்கலை நேரடி சேர்க்கை தேர்வு ஓராண்டுக்கு பின் கிடைத்தது விடிவு!

மதுரை;மதுரை காமராஜ் பல்கலை நேரடி சேர்க்கை (லேட்ரல் என்ட்ரி) தேர்வில், உண்மை சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்களை கண்டறிந்து ஒரு சில நாட்களில் தேர்வு முடிவு வெளியிட செயலர் அபூர்வா அறிவுறுத்தியுள்ளார்.இப்பல்கலை தொலைநிலைக் கல்வியில் நேரடி இரண்டாம் மற்றும் மூன்றாம்
ஆண்டு சேர்க்கையான மாணவர்களுக்கு 2014 மே மாதம் தேர்வு நடந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற் பட்டோர் எழுதினர். ஜூனில் முடிவுகள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் நேரடி மாணவர் சேர்க்கையில் சிலர் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து உயர்கல்வி செயலர் அபூர்வாவிற்கு ஆதாரங்களுடன் புகார்கள் அனுப்பப்பட்டன. இதனால் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. இதில் உரிய கட்டணம் செலுத்தி, உண்மை சான்றிதழ்கள் சமர்ப்பித்து, நியாயமாக தேர்வு எழுதி பட்டம் பெறலாம் என்ற கனவில் இருந்தவர்கள் மற்றும் வேலைவாய்ப்பிற்கு காத்திருந்த மாணவர்கள் பாதித்தனர்.

இந்நிலையில் சென்னையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது உண்மை சான்றிதழ்கள் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட செயலர் அறிவுறுத்தினார்.பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சான்றிதழ்கள் குறித்த உண்மை தன்மை அறிவது குறித்து விசாரணை நடந்ததால் ஓராண்டுக்கும் மேல் இத்தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை. இந்நிலையில் சான்றிதழ்கள் உண்மை தன்மை அறிந்து தேர்வு முடிவுகள் வெளியிட சிண்டிகேட் கூட்டத்தில் செயலர் அறிவுறுத்தியுள்ளார். ஒருசில நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்," என்றார்.

வழிகாட்டிகளுக்கும் அனுமதி:இப்பல்கலையில் பல்வேறு துறைகளில் பி.எச்டி., முழுநேரம், பகுதிநேர ஆய்வாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டியாக செயல்பட நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.அவர்களின் தகுதி குறித்து அறிக்கைகள்
பெறப்பட்டு பல மாதங்களாக இந்த விண்ணப்பங்கள் முடங்கி கிடந்தன. இதில்
தகுதியுள்ள அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டிகளின் பட்டியலை வெளியிடவும் இப்பல்கலை கன்வீனர் குழு தலைவரும் உயர்கல்வித்துறை செயலருமான அபூர்வா உத்தரவிட்டார். பல மாதங்களாக நிலுவையில் இருந்த இப்பிரச்னையும் தற்போது முடிவுக்கு வர உள்ளது.