பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம்

சக மாணவர்களால் தாக்கப்பட்டு, பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கொல்லப்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி மகன் சூர்யா (9). அவர் கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.



அதே வகுப்பில் மாணவர் சூர்யாவுடன் படித்த, வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த சக மாணவர்கள் இரண்டு பேருக்கும் இடையே பிப்ரவரி 29-ஆம் தேதி காலை மோதல் ஏற்பட்டது. 


இதில் சூர்யா படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மார்ச் 5-ஆம் தேதி உயிரிழந்தார். மாணவர் சூர்யாவைத் தாக்கிய, இரண்டு மாணவர்களை, திருச்செங்கோடு போலீஸார் கைது செய்து, சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.


அதைத் தொடர்ந்து மாணவர் சூர்யாவின் தந்தை பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

 
அதில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வழங்கப்படும் ரூ.3.65 லட்சம் நிவாரண உதவியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். அதன்படி, முதல் கட்டமாக ஆதி திராவிடர் நலத் துறை மூலம் ரூ.2.80 லட்சம் சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.


இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்திராகாந்தி தலைமையில் பள்ளிக்குச் சென்ற குழுவினர், தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.


விசாரணை முடிவில் சம்பவம் நடந்த அன்று மாணவர்களைக் கவனிக்காமல் மெத்தனமாகப் பணியாற்றியது, சம்பவம் குறித்து மாவட்ட கல்வித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தது போன்ற காரணங்களுக்காக, பள்ளித் தலைமையாசிரியை கனகவல்லியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்திராகாந்தி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.