சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு சோதனையான கணிதத் தேர்வு

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கு திங்கள்கிழமை கணிதம், யோகா, நுண்ணுயிரியல், முதலுதவி உள்ளிட்ட 11 பாடத் தேர்வுகள் நடைபெற்றன.


இதில், கணிதத் தேர்வு எதிர்பார்த்ததை விடவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக 6 மதிப்பெண் வினாக்களான எண் 9, 12, 19, 23, 26 ஆகியவற்றை 4 மதிபெண் வினாக்களாகக் கேட்டதால், பதில் எழுத கூடுதல் நேரம் பிடித்ததாகவும், பெரும்பாலான வினாக்கள் என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தில் இல்லாத வினாக்களாகவும் இருந்ததால் கணிதப் பாடம் எழுதியவர்களுக்கு இது சோதனையான நாளாக அமைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.


34 பேர் முறைகேடு : தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தனித் தேர்வர்கள் உள்ளிட்ட 34 பேர் பிடிபட்டனர். இவர்களில் 18 பேர் கணக்குப் பதிவியல் தேர்வு எழுதியவர்கள், 16 பேர் வேதியியல் தேர்வு எழுதியவர்கள்.


திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 16 தனித் தேர்வர்கள் உள்ளிட்ட 17 மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் பிடிபட்டனர். அடுத்தபடியாக சேலத்தில் 4 தனித் தேர்வர்கள் உள்ளிட்ட 5 மாணவர்கள் பிடிபட்டனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவிலானோர் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாகவும், அங்கு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக மாணவர்களிடையே தகவல் பரவியது குறித்தும் தேர்வுத் துறையினர் விசாரிக்கின்றனர்.