மாணவர்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும்
746 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்த
தற்காலிக அங்கீகாரம் வரும் மே 31–ந் தேதிக்கு பின்னர் நீட்டிக்கப்படாது
என்றும், ஐகோர்ட்டில் தமிழக பள்ளிக்கல்வி துறை பதிலளித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், மாற்றத்துக்கான இந்தியா
என்ற அமைப்பின் இயக்குனர் நாராயணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல
மனுவில் கூறியிருப்பதாவது:–
94 குழந்தைகள் பலி
கடந்த 2004–ம் ஆண்டு கும்பகோணத்தில்
ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94
குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 18 பேர் தீக்காயமடைந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு அமைத்த நீதிபதி சம்பத் கமிஷன், பள்ளிக்கூடங்களுக்கு
அங்கீகாரம் வழங்குவது குறித்து சில பரிந்துரைகளை செய்தது.
அந்த பரிந்துரைகளை தமிழக அரசும் சட்டசபையில்
வைத்து விவாதித்து ஏற்றுக்கொண்டது. அதேபோல, முன்னாள் துணைவேந்தர்
சிட்டிபாபு தலைமையிலான கமிட்டி செய்த பரிந்துரைகளையும் தமிழக அரசு
ஏற்றுக்கொண்டது.
ரத்து செய்யவேண்டும்
இந்த பரிந்துரைகளின்படி, மெட்ரிக்குலேசன்
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு இடவசதி, கட்டிடம், விளையாட்டு
மைதானம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் உள்ளதா? என்பது குறித்து கல்வித்துறை
ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரே, அந்த
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை,
இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், தமிழகம் முழுவதும் 746 பள்ளிகளுக்கு
அங்கீகாரம் வழங்கி கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந் தேதி
உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். 746
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளில்
சேர்க்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்காலிக அங்கீகாரம்
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில்
தாக்கல் செய்த பதில் மனுவில், ‘746 பள்ளிக்கூடங்களுக்கும் ஒரு முறை என்ற
அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த
பள்ளிக்கூடங்களில் படிக்கும் சுமார் 5 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களின் நலன்
கருதி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. அதுவும், இந்த தற்காலிக அங்கீகாரம்
வரும் மே 31–ந் தேதி வரைதான் செல்லும். அதன்பின்னர், தற்காலிக அங்கீகாரம்
நீட்டிக்கப்படாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நிலம் உள்ளிட்ட அனைத்து
அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம்
வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த பொதுநல வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.