வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

திட்டமிட்ட பாதையில் ராக்கெட் சென்று கொண்டிருக்கிறது. ராக்கெட் செல்லும் பாதையை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
இப்போது 1,425 கிலோ எடை கொண்ட 6-ஆவது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப், பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவியது இஸ்ரோ.
இதற்காக எரிபொருள்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி. சி32 என்ற 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் செயற்கைக்கோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கி. மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 12 ஆண்டுகளாகும். இதன்மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.