பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் எதிர்மறைக் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வலியுறுத்தல்

பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கதைப் பகுதியில் கேட்கப்பட்ட எதிர்மறைக் கேள்விக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழாசிரியர்கள் வலியுறுத்தினர்.

 
        அதே வேளையில் பெரும்பாலான வினாக்கள் பள்ளிக் கல்வித் துறை, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கிய குறைந்த கற்றல் பெட்டகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலைத் தமிழாசிரியர் ஆ.ராமு கூறியது:
பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தேர்வு 80 மதிப்பெண்களைக் கொண்டது. அரசு வழங்கிய குறைந்த கற்றல் பெட்டகத்தில் இருந்து நான்கு மதிப்பெண் வினாக்கள் 6, ஆறு மதிப்பெண் கொண்ட வினாக்களில் ஒன்று, 10 மதிப்பெண் கொண்ட கதைப் பகுதியில் ஒன்று, 2 மதிப்பெண் கொண்ட தமிழாக்கம் பகுதியில் இரண்டு, மொழிப் பயிற்சிப் பகுதியில் நான்கு, ஒரு மதிப்பெண் வினாக்களுள் என, மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு 48 மதிப்பெண்கள் குறைந்த கற்றல் பெட்டகத்தில் இருந்து வந்துள்ளது. இதனால், மாணவர்களுக்குத் தேர்வு எளிமையாக அமைந்தது.
அதே வேளையில் கதைப் பகுதியில் 10 ஆண்டுகளாகக் கேட்கப்பட்டு வந்த பகுதி வாரியான வினா கேட்கும் முறை இத்தேர்வில் முற்றிலும் எதிர்மறையாக வந்துள்ளது. அதாவது 10 கதைகளைக் கொண்ட துணைப் பாடப் பகுதியில் முதல் 5 கதைகளில் இருந்து கதையைச் சுருக்கி வரைதலும், நாடக வடிவில் எழுதுதலும் என, இரண்டு வினாக்கள் கேட்கப்படுவதற்குப் பதிலாக மாந்தர் பண்பு நலன் எழுதுதல், கற்பனைக் கதை எழுதுதல் என முற்றிலும் எதிர் மறையாக இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
6 முதல் 10 வரை உள்ள கதைப் பகுதியில் இருந்து மாந்தர் பண்பு நலன் எழுதுதல், கற்பனையாகக் கதை எழுதுதல் என, இரண்டு வினாக்கள் கேட்கப்படுவதற்குப் பதிலாக கதையைச் சுருக்கி வரைதலும், நாடகவடிவில் எழுதுதலும் என இரண்டு வினாக்கள் முற்றிலும் எதிர்மறையாகக் கேட்கப்பட்டுள்ளன.
இது அரசு வழங்கிய வினாத்தாள் தயாரிக்கும் முறைக்கும் அரசு வழங்கிய குறைந்த கற்றல் பெட்டகத்தில் கூறியுள்ளதற்கும் எதிராக வந்துள்ளது. எனவே, வினா எண் 13, 14-க்கு விடை எழுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுத் துறை முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றார். மொழிப் பயிற்சியில் சில வினாக்கள் கடினமாக வந்துள்ளன. இருப்பினும், மொத்தத்தில் பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்களும், தமிழாசிரியர்களும் தெரிவித்தனர்.