பிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல்

திண்டுக்கல்;பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் மதுபானங்கள் குறித்த வினா இடம் பெற்றதால் பெற்றோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.

          பிளஸ்2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதில் கேட்கப்பட்டு இருந்த ஒருவினாதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பகுதி 'ஏ' ல் பிரிவு 'பி'ல் 5வது வினா, “முதியவர் பெஹ்ரமான், இலையை வரைந்து முடிக்கும் வரை எவ்வகை மதுவை அதிகம் குடித்தார்? என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு விடைகளாக 'ஒயின், வோட்கா, பீர், ஜின்' என மதுவகைகள் இடம்பெற்று இருந்தன.
இதனால் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வினா மாணவர்களுக்கு மதுவின் வகைகளை அறிமுகப்படுத்துவது போல இருப்பதாக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கருதுகின்றனர். மதுவிலக்கை அமல்
படுத்த பலஅமைப்புகளும் போராடி வரும் நிலையில், பள்ளி மாணவர்களிடம், பொதுத் தேர்வில் இதுபோன்ற வினா கேட்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பி
உள்ளது.
வெளிநாட்டு கதையம்சத்தையொட்டி வினா எழுப்பப்பட்டு இருந்தாலும் இவ்வினாவையே தவிர்த்து இருக்கலாம். அதை
விடுத்து நேரடியாக அதன் வகைகளை எடுத்துக் கூறி, விடைபெறும் வகையில் வினாத்தாளை அமைத்திருப்பது சரியல்ல என சிலஆசிரியர்களும் பெற்றோரும் கருத்து தெரிவித்தனர்.
ஆசிரியர் முருகேசன் (பாரத் டுட்டோரியல், வத்தலக்குண்டு) கூறியதாவது: மாணவர்களிடையே மதுப்பழக்கம் தொற்றி வரும் நிலை உள்ளதால் கேள்வித் தாள் தயாரித்தவர்கள் இதை தவிர்த்திருக்கலாம். இதே பாடத்தில் வேறு நல்ல கேள்விகள் உள்ளன.
மாணவனுக்கு தெரியாத விபரங்களை ஆசிரியர்களே :விளக்கமாக சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். எதிர்காலத்தில் இந்த தவறுகள் நடக்காதவாறு கேள்வித்தாள் தயாரிக்க வேண்டும்.