குரூப் 2ஏ தேர்வு: வரும் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு

குரூப் 2ஏ தேர்வில் நேர்முகம் இல்லாத பணியிடங்களில் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:



குரூப் 2ஏ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு (உதவியாளர்கள்-எழுத்தர்கள் உள்பட 48 இடங்கள்) நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்டமாக நடைபெறும் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது, அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.


சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமும், அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் வழியாகவும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.


இதில், கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள் மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். இதனால், அழைக்கப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டி.என்.பி.எஸ்.சி.,தெரிவித்துள்ளது.