சேமிப்பு கணக்கில் அளவுக்கு மீறினால்... பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கவே, சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை, 'டேர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையாக மாற்றப்படுகிறது; இதன் மூலம் வாடிக்கையாளர்களே பயன் அடைகின்றனர்' என, எஸ்.பி.., என்றழைக்கப்படும், பாரத ஸ்டேட் வங்கி
தெரிவித்துள்ளது. சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை, வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல் பருவ கால வைப்புத் தொகையாக மாற்றியதாக, புதுக்கோட்டை எஸ்.பி.., வங்கி கிளை மீது வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.இதுகுறித்து, எஸ்.பி..,யின் சென்னை மண்டல அலுவலக மூத்த அதிகாரி கூறியதாவது:சேமிப்பு கணக்கு துவங்கும் போதே, 'சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் இருந்தால், அதை பருவ கால வைப்புத் தொகையாக மாற்றிக் கொள்ளலாம்' என்ற உறுதி, வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது. இந்த உறுதி, மல்டி ஆப்ஷன் டிபாசிட் - எம்..டி., - பல்வகை வைப்புத் தொகை திட்டம் என அழைக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், 'சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் எவ்வளவு தொகை இருக்கலாம்; அதற்கு மேல் பணம் இருக்கும் போது, அதை பருவ கால வைப்புத் தொகையாக மாற்றலாம்' என, உறுதியளிக்க வேண்டும். பருவ கால வைப்புத் தொகையாக எத்தனை நாட்களுக்கு இருக்கலாம் என்ற விருப்பத்தையும் வாடிக்கையாளர் தெரிவிக்கலாம்; வைப்புத் தொகையாக இருக்கும் காலத்திற்கேற்ப வட்டி விகிதம் மாறுபடும்.சேமிப்பு கணக்கில் இருந்து பருவ கால வைப்புத் தொகையாகமாறும் பணத்தை, வைப்புத் தொகை காலம் முடிந்து தான் எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இடைப்பட்ட நாட்களிலும் எடுத்துக் கொள்ளலாம்; அதற்கேற்ப வட்டி அளிக்கப்படும்.சேமிப்பு கணக்கில் பணம் இருக்கும் போது, அதற்கு, 4 சதவீத வட்டி கிடைக்கும். பருவ கால வைப்புத் தொகையாக மாறும் போது, குறைந்தபட்சம், 7 சதவீதத்திலிருந்து, வைப்புத் தொகை காலத்துக்கேற்ப வட்டி கிடைக்கும்.புதுக்கோட்டையில் நடந்தது என்ன?புதுக்கோட்டை, எஸ்.பி.., கிளையில், அரசு ஊழியர்கள், காவல் துறை அலுவலர்களுக்கு, கார்ப்பரேட் ஊழியர் திட்டம் அடிப்படையில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கில், 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்தால் அது பருவ கால வைப்புத் தொகையாக மாறும்.இதற்கான எம்..டி., உறுதி, வாடிக்கையாளரிடம் பெறப்பட்டுள்ளது. இந்த வைப்புத் தொகை மாற்றம் குறித்ததகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுஉள்ளது. மாத ஊதியம் பெறுபவர்களுக்கு,அவர்களின் சேமிப்பு கணக்கு தொகைக்கு கூடுதல் வட்டி அளிக்கும் நோக்கில் இந்த வைப்புத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இப்படி வங்கி கூறினாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் எப்போது உறுதி பெறப்பட்டது என்பது தெரியவில்லை; எஸ்.எம்.எஸ்., சும் அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது.