போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு காணவேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் கடந்த 10–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழக அரசின் சில துறைகளின் தலைமை பொறுப்பில் உள்ள இயக்குனர்கள், ஆணையர்கள் ஆகியோர் வேலை செய்யாத நாளில் சம்பளம் இல்லை என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து வருகின்றனர். இதன்மூலம் அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதுடன், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.
மேலும், வேலை நிறுத்த போராட்டத்துக்கு, அரசு உயர் அதிகாரிகள்தான் காரணமாக உள்ளனர். ஊழியர்களின் கோரிக்கையை உடனுக்குடன் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதில்லை. எனவே சம்பளத்தை பிடித்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் ஆட்சேபனையை தெரிவிப்பதுடன், மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடனே தலையிட்டு, ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது