நாளைய வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்

முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.


ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை.

உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்கும் வெவ்வேறான விதமான வினாத்தாள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்வி எண் மாறுபடுவதால் முறைகேடு செய்ய முடியாது.மேலும் தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.