பொதுத்தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு 'டிசி' தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சியை காரணம் காட்டி 10ம் வகுப்பு மாணவர்கள் விருதுநகர் மாவட்டம் எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைபள்ளியில் 13 பேருக்கும், ராமநாதபுரத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 7 பேருக்கும் 'டிசி' கொடுக்கப்பட்டது.

பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரத்தில் 'டிசி' கொடுத்து அவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்புவதால் அவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் இதுபோன்ற செயல்களை செய்வது தவறான செயல்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நெருங்கும் நேரத்தில் 'டிசி' கொடுத்து மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதுபோன்று நிகழ்வுகள் மேலும் நடந்தால் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணிக்கவும், அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்., என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.