மாணவியரிடம், ஒழுக்கத்துடனும்,
மரியாதையுடனும் நடந்து கொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக,
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.
டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம்
பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர்
மேனகா, கூறியதாவது: மாணவியரிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களை
பரிசளித்து, கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது
குறித்து அறிவிக்கப்படும். பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவக் கூடிய
வகையில், மொபைல் போன்களில் அலாரம் பட்டன் அமைப்பது குறித்து
ஆலோசிக்கப்படுகிறது.
ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, இந்த பட்டனை
பெண்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அலாரம் அடிக்கும்.
உடனடியாக போலீசார் உதவிக்கு வர முடியும். இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை
நடந்து வருகிறது.குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்கொள்வது
குறித்து பெண்களுக்கும், மாணவியருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு
மேனகா கூறினார்.