தலைமை செயலக ஊழியர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி

சென்னை:சென்னை, தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் உதவிப் பிரிவு அலுவலர்கள், நேற்று திடீர் போராட்டத்தில் குதித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமைச் செயலகத்தில், 1,300 உதவிப்பிரிவு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, 2009 வரை, மத்திய அரசின் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும், உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பின், மத்திய அரசு அலுவலர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டபோது, இவர்களுக்கு உயர்த்தப்படவில்லை.எனவே, மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.நேற்று காலை, உதவிப் பிரிவு அலுவலர்கள், தலைமைச் செயலக ஊழியர் சங்கம் முன் குவிந்தனர். சங்கத் தலைவர் கணேசன், நிர்வாகிகளுடன், தலைமைச் செயலரை சந்திக்கச் சென்றார். அவர், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் டேவிதாரை சந்திக்கும்படி கூறினார்.
அதன்படி அவரை சந்தித்தனர். அவர், 'ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைக்கப்பட உள்ளது; அப்போது, உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்' எனக் கூறினார்.
இதை ஏற்காததால், கணேசன் தலைமையில், அனைவரும், சங்க அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று, சங்க செயற்குழு கூடி, அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளது