உடுமலை : தேர்வு பயத்தால், இறுதி நேரத்தில்
பள்ளிக்கு வராமல் ' ஆப்சென்ட்' ஆகும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு, சிறப்பு 'கவுன்சிலிங்' அளிக்கும் திட்டம்
துவங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சூழல்களில் மனதளவில்
பாதிக்கப்படும், பள்ளி குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக, நடமாடும்
ஆலோசனை மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்களிடம் உள்ள வன்முறை
எண்ணங்களை களையும் நோக்கத்தில், இத்திட்டம் துவக்கப்பட்டது.
கடந்தாண்டு, பொதுத்தேர்வு நேரத்தில்,
இம்மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு 'கவுன்சிலிங்' அளிக்கப்பட்டதால்,
தேர்ச்சி விகிதம் அதிகரித்ததாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, மார்ச்சில் துவங்க உள்ள பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை
தயார்படுத்தும் விதமாக, ஆலோசனை வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
தேர்வு பயத்தாலும், சரியாக படிக்காத
காரணத்தாலும், தேர்வை புறக்கணிக்க எண்ணி, பள்ளிகளுக்கு விடுப்பு எடுத்து
வரும் மாணவர்களே இலக்கு. திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட அரசு
பள்ளிகளில், விடுப்பு எடுத்துள்ள பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோருக்கும், ஆலோசனை அளிக்கப்படுகிறது.
உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறியதாவது:
இறுதி நேரத்தில் அனைத்து பாடங்களையும் படிப்பதால், பலரும் தேர்வு நேரத்தில்
பாடங்களை மறந்து விடுகின்றனர். இதனால் தேர்ச்சியடைய முடியாமல் போகிறது.
தேர்ச்சி பெறாமல் போய்விடுவோமோ என்ற பயத்தால், மாணவர்கள், தேர்வுக்கு
முன்னரும், தேர்வின்போதும் பள்ளிக்கு விடுப்பு எடுக்கின்றனர்.
தேர்வை கண்டு பயப்படும் மாணவர்களை, பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு விடுப்பு எடுத்துள்ள மாணவர்களை
கண்டறிந்து, தேர்வு பயத்தை நீக்கும் வகையில், ஆலோசனை வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.