டி.இ.ஓ., காலிப்பணியிடம் கல்வித்துறை நடவடிக்கை

தமிழக பள்ளி கல்வித்துறையிலுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) காலியிடங்களை நிரப்ப, 2008க்குள் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது. அரசு
உயர் நிலை, தொடக்கக் கல்வித்துறையில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. 

சீனியர் தலைமை ஆசிரியர்களே கூடுதலாக கல்வித்துறை அலுவலர் பணியை கவனித்தனர். பொறுப்பு அலுவலர் என்பதால், துறை சார்ந்த சில முடிவு, உத்தரவுகளை எடுக்காமல் இருந்தனர்.பணியில் தொய்வு நிலை அறிந்து, டி.இ.ஓ., காலியிடங்களை நிரப்ப கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. முதல் கட்டமாக 30 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. எஞ்சிய காலியிடங்களை வரும் கல்வியாண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

        இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னுரிமை கருத்துரு கேட்டு கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2008 டிச.,31க்குள் அரசு உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் முன்னுரிமைபடி, சி.இ.ஓ., அலுவலக ஊழியர்கள் பட்டியலை சேகரித்து அனுப்புகின்றனர்.
 

          அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஏற்கனவே நிரப்பிய காலி யிடம் தவிர, 25க்கும் மேலான டி.இ.ஓ., காலியிடம் விரைவில் நிரப்பப்படும். 40 சதவீதம் உயர் நிலைக்கும், 35 சதவீதம் மேல் நிலைக்கும் இடம் அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சீனியர் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு உள்ளது,” என்றார்.