தொடரும் அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': மாநிலம் முழுவதும் இன்று மறியல்.

தமிழக அரசு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' இரண்டாவது நாளாக, நேற்றும் நீடித்தது. அரசிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால், மாநிலம் முழுவதும், இன்று மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 
       புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி பணியாளர்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய, அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.
இதில், மூன்று லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.நேற்று, இரண்டாவது நாளாக, ஸ்டிரைக் நீடித்தது. இதனால், அரசு பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:தொடர் போராட்டங்கள் மூலம், அரசின் கவனத்தைஈர்த்துள்ளோம். மூத்த அமைச்சர்கள், 'கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு சென்று, தீர்வு காண்போம்' என, தெரிவித்தனர். கோரிக்கைகளுக்கான அரசாணைகள் கிடைக்கும் வரை, ஸ்டிரைக் நடக்கும் என்ற நிலையை எடுத்துள்ளோம். இன்று, சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதார துறையின் சங்கங்களுடன் பேச்சு
கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறையில் உள்ள, சுகாதார அலுவலர் சங்கம், நர்ஸ்கள் சங்கம், காசநோய் பணியாளர் சங்கம், அடிப்படை பணியாளர் சங்கம் உட்பட, பல சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். அரசு டாக்டர்கள் சங்கம் உட்பட, சுகாதாரத்துறை சார்ந்த, 10க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகளுடன், மூத்த அமைச்சர்கள் குழு, நேற்று பேசியது.'பேச்சு சுமுகமாக நடந்தது; விரைவில், பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது' என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.