விடைத்தாளில் விளையாடினால் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாளில் விளையாடினால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என, மாணவர்களை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

மார்ச் 4 ல் பிளஸ் 2 அரசு தேர்வு, மார்ச் 15 ல் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகின்றன. கடந்த காலங்களில் சில மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகள் அனைத்தையும் விளையாட்டு தனமாக பேனாவால் கோடிட்டு அடித்து விடுகின்றனர்.இதனால் அவர்களின் விடைத்தாளை திருத்துவதிலும், மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிப்பதிலும் அரசு தேர்வுத்துறைக்கு சிரமம் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு முதல், விடைத்தாளில் எழுதிய அனைத்து பதில்களையும் அடித்துவிடுவது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அடுத்த 2 பருவங்களுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி எச்சரித்துள்ளார்.


இதுகுறித்து முன்கூட்டியே மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வால்போஸ்டர்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து காலை இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டுமெனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.