29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய
திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்
வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள், அறிவிப்புகள் இருக்கும்.
குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்கு தற்போது ரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.
மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமை அதிகரிக்கும்.
தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2 லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதார வல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது