உலகிலேயே மிகவும் மலிவான விலையில், 'ஸ்மார்ட் போன்' இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.

என்.சி.ஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த நொய்டாவில், 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், உலகின் மிக மலிவான ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது. 'பிரீடம் 251' எனப் பெயரிடப்பட்ட, இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.டில்லியில், நேற்று மாலை நடந்த விழாவில், பிரீடம் 251 ஸ்மார்ட் போன், அறிமுகப்படுத்தப்பட்டது.
ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரீடம் 251 ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு, 18ம் தேதி, காலை, 6:00 மணிக்கு துவங்கி, 21ம் தேதி இரவு, 8:00 மணிக்கு முடிவடையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ரி ங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின், www.freedom251.com என்ற, இணையதளத்தில், இந்த போனை பெற முன்பதிவு செய்யலாம்.

இத்தனை வசதிகளா?
பிரீடம் 251 போனில், இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்து, ரிங்கிங் பெல்ஸ் நிறுவன இணையதளத்தில் கூறியிருப்பதாவது: * 5,000 ரூபாய் மதிப்புள்ள போன்களுக்கு உள்ளது போன்ற, 4 அங்குல தொடுதிரை
* 'டுவிட்டர், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் வேகமாக இயங்கக் கூடிய வகையிலான, 1 'ஜிபி' நினைவுத்திறன்
* 8 ஜிபி தகவல் சேமிப்பு திறன்
* 3.2 'மெகாபிக்சல்' பின்புற கேமரா
* 0.3 மெகாபிக்சல் முன்புற அல்லது, 'செல்பி'கேமரா
* ஒரு நாள் முழுவதும் தாங்கக் கூடிய, 1,450 எம்.ஏ.எச்., திறனுள்ள, 'பேட்டரி'
* 1.3 கிகாஹெர்ட்ஸ் குவாட் - கோர் பிராசசர்
* 32 ஜி.பி., மைக்ரோ எஸ்.டி., கார்டு பொருத்த முடியும்
* ஒரு ஆண்டு வாரண்டியும் உண்டு
* நாட்டின் பல பகுதிகளில், 500க்கும் அதிகமான சர்வீஸ் சென்டர்கள் அமைக்கப்படுகின்றன.