பி.ஏ., - பி.எஸ்சி.,யுடன் இணைந்து பி.எட்., படிப்பு

சென்னை:பி.ஏ., மற்றும் பி.எஸ்சி.,யுடன் இணைந்த, பி.எட்., படிப்பை, வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய, திறந்தநிலை பல்கலை முடிவு செய்துள்ளது.

பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் அளித்த பேட்டி:எங்கள் பல்கலைக்கு, யு.ஜி.சி., மானிய அந்தஸ்து கிடைத்துள்ளது. இனி எங்கள் பல்கலைக்கு, புதிய படிப்புகள், ஆசிரியர் நியமனம், ஆய்வகம், ஆராய்ச்சி என, பல மேம்பாட்டு திட்டங்களுக்கும், மத்திய அரசின் நிதி கிடைக்கும். இதையடுத்து, தேசிய மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலான, 'நாக்' அனுமதி பெற உள்ளோம். இந்த அங்கீகாரம் கிடைத்தால், எந்த படிப்பையும், எங்கள் பல்கலையில் துவங்க முடியும்.வரும் கல்வி ஆண்டில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் அனுமதி பெற்று, பி.எட்., நேரடி வகுப்புகளை துவங்க உள்ளோம். பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., படிப்புடன், பி.எட்., படிப்பும் இணைந்து படிக்கும் வகையில், ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பாக நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.