ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில்
ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
ஒத்திவைத்தது. தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர்
பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஆதார் அட்டை எண்களை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டில்
(என்.பி.ஆர்.,) இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இப்பணியில் ஈடுபடுத்த
துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளி வேலைநாட்களில்
அப்பணியை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி
பாதிக்கிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஆசிரியர்களை கல்விசாராத
பணியில் ஈடுபடுத்தக்கூடாது. வெள்ள பாதிப்பால் பலநாட்கள் பள்ளிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், பள்ளி வேலைநாட்கள் குறைந்துவிட்டது.
என்.பி.ஆர்.,பணியால் பள்ளி வேலைநாட்கள் மேலும் குறையும்.
ஆதார் எண்ணை, என்.பி.ஆருடன் இணைக்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை
விதிக்க வேண்டும். இவ்வாறு, பாலசந்தர் மனு செய்திருந்தார். நீதிபதிகள்
வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு பிப்.,1 க்கு
ஒத்திவைத்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.