ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை தடை : மொபைல் போன் கொண்டு வராதீங்க!

'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான விவகாரத்தை தொடர்ந்து, 'பொதுத் தேர்வு மையங்களுக்கு ஆசிரியர்கள் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது' என, தேர்வுத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
முற்றுப்புள்ளி

கடந்த, 2015, பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வு நாளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் சில ஆசிரியர்கள் மூலம், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானது. இந்த ஆண்டு இப்பிரச்னைக்கு, தேர்வுத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
'தேர்வு மைய பணிக்கு வரும் ஆசிரியர்கள், எந்தக் காரணத்திற்காகவும் மொபைல் போன் கொண்டுவரக் கூடாது. அதே போல், மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் மொபைல் போன் கொண்டுவரக் கூடாது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த பொதுத்தேர்வின் போது பல மாணவர்கள், 100க்கு, 97 சதவீதம் நன்றாக பதில்
எழுதியிருந்தாலும், விடைத்தாள் முழுவதையும், 'ஸ்கெச்சால்' அடித்திருந்தனர். இதை விசாரித்த போது, தேர்வில், 'சென்டம்' எடுக்க முடியாது என நினைத்தால், உடனடித் தேர்வை எழுதும் வகையில் விடைத்தாளை, 'ஸ்கெச்சால்' அடிக்கும் வழிமுறையை, தனியார் பள்ளி மாணவர்கள் மேற்கொண்டது தெரியவந்தது.
வரவேற்பு
எனவே, 'இந்த ஆண்டு, விடைத்தாளில் பதிலை எழுதிவிட்டு முழுவதுமாக, 'ஸ்கெச்சால்' அடிக்கக் கூடாது; அவ்வாறு அடித்தாலும் அந்த விடைத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்' என்றும், தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


முறைகேடுகளை தடுக்க, தேர்வுத்துறை எடுத்த முடிவுகளை வரவேற்கிறோம். தனியார் பள்ளி
ஆசிரியர்களுக்கும் இந்த உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். சத்தியமூர்த்தி, தலைவர் - உயர் மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்கம்