தரம் உயரவில்லை: யு.ஜி.சி., வேதனை

சென்னை: அண்ணா பல்கலை யின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் மற்றும் சர்வதேச விவகார மையம் சார்பில், சர்வதேச கல்வியாளர்கள் கருத்தரங்கு, துணைவேந்தர் ராஜாராம் தலைமையில் நேற்று நடந்தது.
கருத்தரங்கில், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது:

அண்ணா பல்கலைக்கழகம், சீர்மிகு திறன் வாய்ந்த பல்கலை அந்தஸ்தை பெற்று தரம் உயர்ந்துள்ளது. வருங்காலங்களில் சீர்மிகு பல்கலைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டில், தரத்தில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் சீர்மிகு
பல்கலைகளுக்கு, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும். இந்த நிதியில், சமூகத்துக்கு தேவையான ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். 'டிஜிட்டல் இந்தியா' திட்டம், திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் 'மேக் இன் இந்தியா' என்கிற இந்திய உற்பத்தி திட்டம் ஆகியவை இலக்கை அடைய, அனைத்து பல்கலைகளும் முயற்சிக்க வேண்டும்.
ஆராய்ச்சிகளின் தரம் உயர வேண்டும்; அதன் மூலம் பட்டங்களின் மதிப்பை உயர்த்த வேண்டும்.
அதற்கு, கல்வியில் தரம் உயர்த்த என்னென்ன நிதியுதவி தேவையோ அனைத்தையும் யு.ஜி.சி., தருகிறது. இவ்வளவு நிதி உதவி செய்தும், யு.ஜி.சி., எதிர்பார்த்த தரத்தை பல்கலைகள் அளிக்கவில்லை. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., நிறுவனங்களுக்கு நிகராக, தரமான கல்வியைத் தர மற்ற கல்வி நிறுவனங்களும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.