வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பும் முன், தகவல் படிவத்தை நிரப்பி, உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இப்படிவத்தை ஆய்வு செய்யும் அலுவலர்கள், அதில், ஆட்சேபனைக்குரிய ஆசிரியர்களின் விண்ணப்பம் இருப்பின், அதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என, மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கோரும் பட்சத்தில், அவை இயக்குனருக்கு அனுப்பி, அனுமதி பெற்ற பின்பே, விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும்.போலிச்சான்றிதழ் கொடுத்து பல ஆசிரியர்களும் தலைமறைவாகி வரும் சூழலில், வெளிநாடு செல்ல இயக்குனரின் அனுமதி அவசியம் வேண்டும் என, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது