சி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில், 32 வருவாய் மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பணியிடங்கள் உள்ளன. இவர்கள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் நியமனம் மற்றும் தேர்வு பணிகள்; மற்ற அரசு துறை சார்ந்த ஆசிரியர்களின் பணிகளை கவனிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கட்டுப்பாட்டில், 32 மாவட்டங்களுக்கு தனியாக, 32 சி.இ.ஓ.,க்கள் உள்ளனர். இதன்படி, மொத்தமுள்ள, 64 சி.இ.ஓ., பணியிடங்களில், 22 இடங்கள் காலியாக உள்ளன.மேலும், சி.இ.ஓ., கட்டுப்பாட்டில், கல்வி மாவட்டம் வாரியாக, 125 மாவட்ட கல்வி அதிகாரி இடங்கள் உள்ளன. இவற்றில், 35 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.பல இடங்களில், சி.இ.ஓ.,க்கள் இல்லாததால், மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., நிதியை கையாள்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் ஆயத்தப் பணிகளை கவனிக்க, கண்காணிப்பு அதிகாரிகளாக, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் வேண்டும். ஆனால், 57 காலியிடங்கள் உள்ளதால், யாரை தேர்வு பணிக்கு அமர்த்துவது என, குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.
பட்டியல் தயார்
காலியிடங்களை நிரப்ப, தகுதியான ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியலில் தயாராக உள்ளனர். அந்த பட்டியலை ஆய்வு செய்து, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., காலியிடங்களை நிரப்ப வேண்டும். அதற்கு தாமதமானால், தேர்வு மற்றும் தேர்தல் பணிகளில், நிர்வாக அளவில் சிக்கல் ஏற்படும். விடைத்தாள் திருத்தம், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மையங்களை கண்காணித்தல் போன்ற பணிகளும் பாதிக்கப்படும்.