குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு

சென்னை :தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பரிசீலனை முடிந்த நிலையில், தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'டை டி.என்.
பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.நிராகரிப்பு பட்டியலில் இல்லாமல், முறையாக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியோருக்கு, ஹால் டிக்கெட் இல்லையெனில், அவர்கள் தங்களின் விண்ணப்ப விவரங்களுடன், வரும், 19ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி.,க்கு contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா தெரிவித்துள்ளார்.மூன்று பேருக்கு தடைவிண்ணப்பித்தவர்களில், ஆறு பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. பட்டியலில், மூன்று பேர், தேர்வு எழுத ஏற்கனவே தடை பெற்றவர்கள். அவர்களில் பெண் தேர்வருக்கு நிரந்தர தடையும், மற்ற இருவருக்கு, இரண்டு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற மூன்று பேர் முன்னாள் ராணுவ வீரருக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்களும் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.