மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் குளறுபடி: ஓய்வூதியர்கள் குற்றச்சாட்டு

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அளையாள அட்டை பலருக்கு கிடைக்கவில்லை எனவும், கிடைக்கப்பெற்ற அட்டையில் விலாசம் மற்றும் விபரங்கள் தவறாக இருப்பதாகவும் ஓய்வூதியர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் சங்கத் தலைவர் வி.ஜெகன்நாதன் தலைமையில் நடைபெற்றது. தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்தையா பேசினார். மாநிலப்பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அளையாள அட்டை பலருக்கும் கிடைக்காமாலும், கிடைக்கப்பெற்ற அட்டையில் விலாசம் மற்றும் விபரங்கள் தவறாகவும் உள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். 2006-க்கு முன் ஓய்வுபெற்ற அனைவருக்கும் தரஊதியமும், 2014-க்கு முன் ஓராண்டு பணிமுடித்து ஓய்பெற்றவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வும் வழங்க வேண்டும்.

குடும்பப் பாதுகாப்புத் தொகையை ரூ.1.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பஞ்சாம் நேசனல் வங்கியில் மாதத்தின் கடைசி நாளியேயே ஓய்வூதியம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.