சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


         மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 370 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

         பழங்குடியினத்தவர்கள் எட்டாம் வகுப்பு படித்திருப்பதுடன், 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் 3 கி.மீ. தொலைவுக்குள் இருத்தல் அவசியம். விண்ணப்பத்துடன் வயது, கல்வித்தகுதி, ஜாதி, இருப்பிடத்துக்கான நகலை இணைக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தாலும் அனைத்துச் சான்றிதழ்களுடன் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அசல் சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்தை வியாழக்கிழமை (டிச.17) முதல் வருகிற 31-ஆம் தேதி மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.