நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல்

ராமநாதபுரம்:கருவூல 'சாப்ட்வேர்' குளறுபடியால் வெள்ள நிவாரண நிதிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 'இ.சி.எஸ்.,' முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக கருவூலங்களில் 'வெப் பேரோல் சாப்ட்வேர்' பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ள நிவாரண நிதிக்காக அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடம் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு ஊழியரிடமும் விருப்ப கடிதம் பெற வேண்டும். அவர்களின் டிசம்பர் மாத ஒரு நாள் ஊதியத்தை அந்தந்த துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் கணக்கில் பிடிக்க வேண்டும். பின் 'முதல்வரின் பொது நிவாரண நிதி' டி.டி.,யாக அனுப்ப வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கருவூல 'வெப் பேரோல் சாப்ட்வேரில்' அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் ஊதியத்தை துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்கில் நேரடியாக செலுத்த வழியில்லை.இதனால் கருவூல அதிகாரிகள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.கருவூல அதிகாரி ஒருவர் கூறுகையில், “ துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்கில் செலுத்த 'சாப்ட்வேரில்' வசதி இல்லை. இதனால் ஊதியத்தை பிடிக்க முடியவில்லை. இதில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.