பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!

பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது. 

          நாட்டில், நான்கு கோடி தொழிலாளர்களுக்கு, யு.ஏ.என்., அளிக்கப்பட்டு உள்ளது. இதில், இரண்டு கோடி தொழிலாளர்கள், யு.ஏ.என்., முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.மீதம் உள்ளவர்களுக்கு, யு.ஏ.என்., பயன்பாட்டு முறை பற்றி போதிய தகவல்கள் இல்லை. இவர்களும், விரைவில், யு.ஏ.என்., முறையை பயன்படுத்த கற்றுத் தரப்படுவர். பொது கணக்கு எண்ணுடன், ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்களை இணைக்க, சந்தாதாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

            இதன்படி, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளை இணைத்த சந்தாதாரர்கள், அவர்களுடைய இருப்புத் தொகையில் இருந்து, தேவையான தொகையை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம். இதற்கு, வேலை அளிக்கும் நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இத்திட்டம் மூலம், பி.எப்., தொகையை, வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்க முடியாது. மேலும், மூன்றாம் நபர் மூலம், பி.எப்., தொகை எடுப்பதால் ஏற்படும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது