ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியா? அதிகாரிகளை இடம் மாற்ற அனுமதி

சென்னை:'தொடர்ந்து, ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளை இடம் மாற்றலாம்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.


தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜன., 20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்; பின், விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.தேர்தல் குறித்து ஆலோசிக்க, தேர்தல் கமிஷனர்கள், ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளனர். அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியல், ஜன., 20ல் வெளியாவதால், அதுவரை கலெக்டர், டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆர்.டி.ஓ., தாசில்தார் போன்ற தேர்தல் பணி சார்ந்த அதிகாரிகளை இடமாற்ற முடியாது; மாற்ற வேண்டுமெனில், தேர்தல் கமிஷன் அனுமதி பெற வேண்டும். தேர்தல் கமிஷனின் உத்தரவை மேற்கோள்காட்டி, தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

2012, மே 31க்கு பின், தொடர்ந்து மூன்று ஆண்டுகள், ஒரே இடத்தில் பணியாற்றிய, தேர்தல் பணி தொடர்பில்லாத, பிற துறை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம் என, அதில் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.