மீலாது நபி: அரசு விடுமுறை 24-க்கு மாற்றம்; வங்கிகள் 4 நாள்கள் செயல்படாது

மீலாது நபி டிசம்பர் 24-ஆம் தேதி வருவதையொட்டி, அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது என்று தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 மிலாது நபியை ஒட்டி, அரசு விடுமுறை டிசம்பர் 23-ஆம் தேதி விடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது. இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அயூப் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, அரசு விடுமுறை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி உத்தரவிட்டுள்ளது என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
 4 நாள்கள் தொடர் விடுமுறை: டிசம்பர் 24-ஆம் தேதி விடுமுறை என்பதால், அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸும், 26, 27 ஆகிய நாள்கள் சனி, ஞாயிறு என்பதால் மொத்தம் 4 நாள்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.
 வங்கிகளுக்கும் விடுமுறை: ஒவ்வொரு மாதமும் 2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். மேலும், அரசு விடுமுறை வங்கிகளுக்கும் பொருந்தும்.
 எனவே, வங்கிகளுக்கும் 4 நாள்கள் விடுமுறை விடப்படுகிறது. ஆகவே, இந்த வாரமே வங்கிகள், ஏ.டி.எம்.-களில் இருந்து தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.