ஏற்கனவே ஒட்டப்பட்ட ரேஷன் கார்டில் இருக்கும் உள்தாள் 2016-ம் ஆண்டுக்கும் செல்லும்; தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கார்டுகளில் ஏற்கனவே ஒட்டப்பட்ட உள்தாள் 2016-ம் ஆண்டுக்கும் செல்லும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


ரேஷன் கார்டுகள்

தமிழகத்தில் 34 ஆயிரத்து 200 ரேஷன் கடைகள் உள்ளன. ஒரு கோடியே 99 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டும் 5 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்டு வந்தது.

கடைசியாக 2005-ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இந்த கார்டுகள் 2009-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. அதன்பிறகு, புதிய கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு வந்தது. இப்படியே, 6 ஆண்டுகள் உள்தாள் ஒட்டப்பட்டது.

உள்தாள் இணைப்பு

கடந்த ஆண்டு இறுதியில், ரேஷன் கார்டுகளில் 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும்போது, கூடுதலாக 2016-ம் ஆண்டுக்கான உள்தாளும் அதில் சேர்ந்தே இடம் பெற்றிருந்தது. எனவே, அந்த உள்தாளையே 2016-ம் ஆண்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

எலக்ட்ரானிக் கார்டு

தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை (ரேஷன் கார்டு) ஆதார் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு கணினி தொகுப்பினை அடிப்படையாக கொண்டு மின்னணு (எலக்ட்ரானிக்) குடும்ப அட்டையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுவினியோகத் திட்டத்தினை முழு கணினி மயமாக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியினை 2015 டிசம்பர் மாதத்துக்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு

இந்தப் பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதால், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீடிக்கவும், ஏற்கனவே குடும்ப அட்டையில் உள்ள உள்தாளை பயன்படுத்திக் கொள்ளவும் உரிய ஆணைகள் வெளியிடுமாறு அரசை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டது.

இதை கவனமுடன் பரிசீலித்த பின்பு அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1-1-2016 முதல் 31-12-2016 வரை மேலும் ஓராண்டிற்கு நீடித்தும், இதற்காக தற்போது குடும்ப அட்டையில் காலியாக உள்ள உள்தாளினை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.