1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. 
தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. மழை
வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன. இந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லாப் பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து டிசம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் அனைத்துப் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகங்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். அவற்றை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதியே அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீலாது நபி, கிறிஸ்துமஸ் விடுமுறை நிறைவடைந்து, ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவியரிடம் மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப் புத்தகம், நோட்டுகள் இருக்க வேண்டும் என மாநிலக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.