வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு
செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு
விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை
செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
வட கிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சென்னை,
கடலுார், விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், பள்ளிகளுக்கு, நவ., 9
முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் மாணவர்கள், பாடப்
புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, புத்தகப் பை, வழிகாட்டி
நுால்கள், சான்றிதழ்களை இழந்துள்ளனர்.
லட்சக்கணக்கான மாணவர்கள், குடும்பத்தினருடன் வீடுகளில் இருந்து வெளியேறி,
பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். பள்ளி திறந்ததும், புதிய
புத்தகங்கள், சீருடை, புத்தகப் பை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், அரையாண்டுத் தேர்வை
தள்ளி வைக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முந்தைய அறிவிப்புப்படி, 10ம் வகுப்புக்கு டிச., 9; பிளஸ் 2வுக்கு டிச.,
7ல் அரையாண்டுத் தேர்வு துவங்கி, டிச., 22ல் முடிய வேண்டும். ஆனால், மழை
விடுமுறையால், ஆறு மாவட்டங்களுக்கு மட்டும், அரையாண்டுத் தேர்வை, ஜனவரி
முதல் வாரத்தில் நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் அவர்களுக்கு பாடங்கள்,
முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மழை விடுமுறையால்,
தேர்வுக்கான பாடங்கள் நடத்துவதில் பிரச்னை இல்லை.ஆனால், மழை பாதித்த
இடங்களில், மாணவர்களிடம் பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன; மீதமிருக்கும் புத்தகங்களும்
நனைந்துள்ளன. பல மாணவர்களுக்கு புத்தகங்கள் சேதமாகி விட்டன. கணிதம்,
அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடங்களில், பாடப் புத்தகங்களை
விட, ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்திய குறிப்புகளை, நோட்டுப்
புத்தகத்தில் மாணவர்கள் எழுதி வைத்திருப்பர்.
தற்போது நோட்டுப் புத்தகம் இல்லாததால், அவர்கள் தேர்வுக்கு தயாராக
முடியாது. புதிய நோட்டுப் புத்தகம் கொடுத்து, மற்ற மாணவர்களின் நோட்டுப்
புத்தகங்களைப் பார்த்து எழுதவும், பாடங்களைப் படிக்கவும் கால அவகாசம் தேவை.
எனவே, டிச., 7ல் துவங்க உள்ள அரையாண்டுத் தேர்வை தள்ளி வைத்து, டிச., 16
அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின், ஜனவரியில் நடத்துவது குறித்து
ஆலோசித்து வருகிறோம். அதே போன்று, டிசம்பரில் வழக்கமாக அறிவிக்கப்படும்,
அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில், பண்டிகை நாட்களுக்கு மட்டும் இந்த
ஆண்டு
விடுமுறை அளித்து விட்டு, சனிக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும்
பள்ளிகளைநடத்தலாம் என்றும் பரிசீலனை செய்கிறோம். ஆனால், மழை விட்டால் தான்
பள்ளி தேதி குறித்து, சரியாக முடிவெடுக்க இயலும்.இதில், 1ம் வகுப்பு முதல்,
9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்விலோ,
விடுமுறையிலோ பெரிய மாற்றம் இருக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரையாண்டுத் தேர்வு தள்ளிப்போகும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், ஆறு
மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் குஷியடைந்துள்ளனர்.
தேர்வை ரத்து செய்ய முடியுமா?
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ்
கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டுத்
தேர்வு தான் பொதுத் தேர்வுக்கு முன்னோட்டம் போன்றது. இந்த தேர்வில்,
அவர்கள் தயாராவதன் மூலமே, பொதுத் தேர்வை சரியாக எழுத முடியும். எனவே,
அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய முடியாது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்
வர உள்ளதால், பொதுத் தேர்வையும் முன்கூட்டியே நடத்த வேண்டியுள்ளது. எனவே,
நீண்ட நாட்கள் அரையாண்டுத் தேர்வை தள்ளிப் போடவும் முடியாது. இவ்வாறு அவர்
கூறினார்.
இன்று விடுமுறை அறிவிப்பு:
கடந்த, 20 நாட்களாக பெய்யும் தொடர் மழையால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும்
திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்றும், விடுமுறை
அளித்து, மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். சென்னை பல்கலை மற்றும் சட்ட
பல்கலையில், இன்றும், நாளையும் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளன.