பி.எட்., பாடத்திட்டத்தில் குளறுபடி ஆசிரியர்கள், மாணவர்கள் புகார்

பி.எட்., படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி, தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. இதில் குளறுபடிகள் உள்ளதாக, ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவர்கள் கூறியதாவது:

பி.எட்., படிப்பில், எந்த அளவுக்கு கற்றுத் தரப்படுகிறதோ, அதற்கேற்ப அவர்களால், மாணவர்களுக்கு திறமையாக பாடம் நடத்த முடியும். ஆனால், தற்போதைய புதிய பாடத்திட்டத்தில், முக்கிய பாடங்களை நீக்கியுள்ளனர். குறிப்பாக, வாசித்தல் பயிற்சி, நுாலக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் முக்கியம். அதில், நுாலக மேலாண்மைப் பாடம் நீக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தை, எப்படி கற்று தர வேண்டும் என, ஓராண்டு படிப்பில், இரண்டு தாள்கள் இருந்தன. பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டான பின், அது ஒரு தாளாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், 'புராஜெக்ட்' செய்தல், 'சார்ட்' தயாரித்தல் என, ஆசிரியர் பயிற்றுவித்தலுக்கு, தேவைப்படாத பாடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் இருந்து, இந்த பாடத்திட்டம் மாறுபடுகிறது. கல்வி கமிட்டியை கூட்டாமலேயே, இது தயாரிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'அரசின் ஒப்புதலுடன் பாடத்திட்டத்தை வெளியிட்டு உள்ளோம்; அரசு மாற்றச் சொன்னால், மாற்றப்படும்' என்றனர்