பள்ளி விடுமுறை தொடர்வது ஏன்?

சென்னை : மழை பாதிப்பு நீடிப்பதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு, இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மழை பாதிப்பு குறைந்த பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்,
எப்போது பள்ளி திறக்கும் என எதிர்பார்த்துள்ளனர். சென்னையின் உட்புற பகுதிகளில், வெள்ளம் வடிந்துள்ளதால், அங்குள்ள பள்ளிகள் இன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது.விடுமுறை என்றபோதும், மழையால் வெளியில் செல்ல முடியாத மாணவ, மாணவியர், 'இன்னிக்கும் லீவா' என, பெற்றோர்களிடம் கேட்கும் நிலை உள்ளது.இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், 'பல பள்ளி வளாகங்களில் நீர் தேங்கியுள்ளது. சில பள்ளிகளின் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளிகளில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அனுப்பிய பின் தான், பள்ளிகளை திறக்க முடியும்' என்றனர்.