காஸ் சிலிண்டருக்கு ஆதார் எண் கட்டாயம்காஸ் நிறுவனங்கள் வலியுறுத்தல்: ஆதார் எண் வழங்காதவர்களின் மானியத்தை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன

காரைக்குடி :காஸ் சிலிண்டர் பெறும் நுகர்வோரின் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணையும் கட்டாயம் பெற்று, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய ஏஜன்சிகளுக்கு, காஸ் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.பெட்ரோலிய நிறுவனங்கள் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சமையல் காஸ்
சிலிண்டர்களை வினியோகித்து வருகிறது. மத்திய அரசு 'பாஹல்' திட்டப்படி வங்கி கணக்கில் மானியம் வழங்கும் முறை 2015 ஜனவரி முதல் அமலில் உள்ளது. இதற்காக காஸ் நுகர்வோரிடம் வங்கி கணக்கு எண், ஆதார் எண்களை காஸ் ஏஜன்சிகள் பெற்றன. ஆதார் எண் இல்லாதோர் வங்கி கணக்கு எண் வழங்கி மானியம் பெற்றனர். இம்மாத கணக்குபடி ஒரு சிலிண்டர் ரூ.592ல் மானியம் ரூ.182 போக ரூ.410 என கணக்கிட்டு கச்சா எண்ணெய் விலைக்கேற்ப அரசு மானியம் வழங்குகிறது.ஆதார் கட்டாயம்: இது வரை காஸ் ஏஜன்சிகள் 50 சதவீத நுகர்வோர்களிடம் மட்டுமே ஆதார் எண் பெற்றிருந்தன. மீதி உள்ளோர் ஆதார் எண் இல்லை என தெரிவித்திருந்தனர். இதனால் ஒருவர் இரண்டு சிலிண்டர் இணைப்பு பெற்றிருந்தாலும் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, காஸ் ஏஜன்சிகள் நுகர்வோர் அனைவரிடமும் கட்டாயம் ஆதார் எண் பெற்று 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யுமாறு காஸ் ஏஜன்சிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
காஸ் ஏஜன்சியினர் கூறுகையில்,' எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர் நுகர்வோரின் ஆதார் எண்களை கட்டாயம் பெற்று, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய வலியுறுத்தியுள்ளன. இது வரை ஆதார் எண் வழங்காத நுகர்வோரிடம் கேட்டு பெறுகிறோம்.ஆதார் எண் வழங்காதவர்களின் மானியத்தை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன,' என்றனர்.