பிளஸ் 2 மாணவர்களுக்குஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 முடிக்க உள்ளோர், உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஜே.இ.இ., பொது நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளுக்கு, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதே, மிகப்பெரிய லட்சியம். இந்த நிறுவனங்களில் படித்தால்,
இறுதியாண்டு படிக்கும் போதே, பன்னாட்டு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

இந்தக் கல்வி நிறுவனங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், சுயாட்சி பெற்றவை யாக உள்ளன. இவற்றில் மாணவர்களைச் சேர்க்க, தேசிய அளவில், 'ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்' என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், இந்த தேர்வை எழுத வேண்டும்.முதலில், ஜே.இ.இ., சாதாரண பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே, 'அட்வான்ஸ்ட்' தேர்வு எழுத முடியும். 'வரும் கல்வி ஆண்டுக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு, 2016 மே, 22ல் நடக்கும்' என,
மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, இந்த தேர்வை, கவுஹாத்தி ஐ.ஐ.டி., நடத்துகிறது; இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கும்.

இதில் தேர்ச்சி பெற்றால், 19 ஐ.ஐ.டி., நிறுவனங்களில் படிக்க இடம் கிடைக்கும். இந்த நிறுவனங்களில், பி.டெக்., - பி.ஆர்க்., - பி.பார்ம்., - பி.எஸ்., - பி.எம்., உள்ளிட்ட, 11 பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேரலாம். தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை,
http://www.jeeadv.ac.in/index.php என்ற இணையதளத்தில் அறியலாம்