இன்று முதல் 28-ந்தேதி வரை நடைபெற இருந்த என்ஜினீயரிங் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

இன்று முதல் 28-ந்தேதி வரை நடைபெற இருந்த என்ஜினீயரிங் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்வுகள்

அண்ணா பல்கலைக்கழத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் கடந்த 12-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ‘செமஸ்டர்’ தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 9-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால், இந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணையின்படி, திங்கட்கிழமை (இன்று) முதல் வருகிற 28-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

ரத்து

இந்த நிலையில் நேற்று சென்னை உள்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து, இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தேர்வுகளை ரத்து செய்து, அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் கணேசன் நேற்று அறிவித்தார்.

ரத்து செய்யப்பட்ட இந்த தேர்வுகள் எந்த தேதியில் நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம்

அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், 23-ந்தேதி (இன்று) நடைபெறும் தேர்வை மட்டும் ரத்து செய்து, சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

சட்டக்கல்லூரி

இந்தநிலையில், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு திங்கட்கிழமை (இன்று) நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் வணங்காமுடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை (இன்று) தேர்வு நடைபெற இருந்தது. கனமழையின் காரணமாக இந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.