கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் நவம்பர் 24 முதல் செல்லாது: மண்டல அலுவலகம் அறிவிப்பு

கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்கள்) நவம்பர் 24-ஆம் தேதி முதல் செல்லாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு:"கையால் எழுதப்பட்ட கடவுச் சீட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதன்பின்பு அவை பயன்பாட்டில் இருக்காது' என்று சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 24-ஆம் தேதிக்குப் பிறகும், கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், புதிதாக விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படலாம். மேலும், பயணத்தின் போது வேறு ஏதேனும் பிரச்னையை எதிர்கொள்ளவும் நேரிடலாம்.
2001-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளில் உள்ளவிவரங்கள் கணினி மூலமே அச்சிடப்படுகிறது. சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளும்போது இவையே அனுமதிக்கப்படுகிறது.குறிப்பாக, 1990-களின் மத்தியில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் 20 ஆண்டுகளாகும். அவற்றின் காலம் இப்போது முடிந்திருக்கும்.
எனவே, கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், வரும் 24-ஆம் தேதிக்கு முன்பாக புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களைwww.passportindia.gov.in என்ற இணையதளத்திலும், 1800-258-1800 என்ற இலவச சேவை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.