10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவித்தபடி அரையாண்டு தேர்வு நடக்குமா?

சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு களுக்கு அரசு தேர்வுத்துறை மூலம், பொதுவான வினாத்தாள் அடிப்படையில், அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.


பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு டிச., 9ல் துவங்கி, டிச., 21ல் முடிகிறது; பிளஸ் 2 தேர்வு டிச., 7ல் துவங்கி, டிச., 22ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு காலை, 10:00 மணி முதல், 12:45 மணி வரை நடக்கும். பிளஸ் 2 தேர்வு காலை, 10:00 மணி முதல், 1:15 மணி வரை நடக்கும். முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை படிக்கவும், அடுத்த, ஐந்து நிமிடங்கள் விடைத்தாள் விவரங்களை நிரப்பவும் நேரம் வழங்கப்படும்.

பருவ மழையால், ஒரு வாரமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டிய பாடங்களை நடத்தாத நிலை உள்ளது. அறிவியல் செய்முறை தேர்வுக்கான, 'ரெக்கார்டு' தயாரித்தல் மற்றும் செய்முறை பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற பணிகளும் இன்னும் துவங்கவில்லை.எனவே, திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என மாணவர்களும், பெற்றோரும் சந்தேகம் அடைந்துஉள்ளனர்.

அரையாண்டு தேர்வு என்றால், பாடப் புத்தகத்திலுள்ள அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப் பட்டிருக்க வேண்டும். தேர்வுக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க முடியுமா என, ஆசிரியர்களும் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன், அரையாண்டு தேர்வை முடிக்க வேண்டும் என்பதால், தேர்வு தேதியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை' என்றனர்.

ஆபத்தான வகுப்பறைகளுக்கு பூட்டு : மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.