ஒரே நாளில் TNPSC மற்றும் NET தேர்வு

பேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 2 தேர்வும், டிச., 27ல், ஒரே நாளில் நடக்க உள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான, இரண்டாவது, 'நெட்' தேர்வு, டிச., 27ல், நாடு முழுவதும் நடக்கிறது.
தமிழக அரசில், 33 துறைகளில்காலியாக உள்ள, 1,863 பணி இடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், டிச., 27ல், குரூப் - 2 தேர்வும் நடத்தப்படுகிறது. நீண்ட காலத்துக்கு பின், இந்தத் தேர்வு நடப்பதால், லட்சக்கணக்கான பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்து
வருகின்றனர்.
அதே நேரத்தில், நெட் தகுதி தேர்வும் டிச., 27ல் நடக்க உள்ளதால், தமிழக பட்டதாரி இளைஞர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து, 'நெட், ஸ்லெட்' சங்க செயலர் நாகராஜன் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் கடைசி ஞாயிறு அன்று, 'நெட்' தேர்வு நடக்கும். அதன்படியே, இந்த ஆண்டும் நடக்கிறது. இந்த தேதியை கருத்தில் கொள்ளாமல்,
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு தேதியை மாற்ற வேண்டும்,'' என்றார்.