"நெட்' தேர்ச்சி பெறாவிட்டால் உதவித் தொகை ரத்து: ஆய்வு செய்ய குழு அமைப்பு

தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

 இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெற "நெட்' தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) சார்பில் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது. 
 இதில், தகுதி பெறும் எம்.ஃபில்., பிஎச்.டி. மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 25,000 உதவித் தொகையும், வேறு சில படிகளும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.
 முதுநிலை ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் மாதம் ரூ. 28,000 உதவித் தொகையும் பிற படிகளும் வழங்கப்படும்.
 அதேநேரம், "நெட்' தகுதி பெறாத மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களும், யுஜிசி-யின் ஆற்றல்சார் பல்கலைக்கழகம் என்ற தகுதியைப் பெற்ற மாநில பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இந்த உதவித் தொகை கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
 இந்த நிலையில், "நெட்' தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தை நிறுத்த யுஜிசி அண்மையில் முடிவெடுத்தது. 
 இதற்கு மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
 இதனைத் தொடர்ந்து, "நெட்' தகுயில்லாதவர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படுவதை நிறுத்தலாமா? அல்லது அதை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குழு ஒன்றை நியமித்துள்ளது.
 இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது:
 மத்திய அரசு அமைத்துள்ள குழு இந்த ஆண்டு இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். 
 அதனடிப்படையில், யுஜிசி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.