தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே
கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மலேசிய நாட்டு கொடி வரையப்பட்ட
நிலையில் எலும்புக்கூடுகளுடன் கூடிய ஒரு விமானத்தின் பாகம்
கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற
பயணிகள் விமானம் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 8-ம் தேதி கடலில் விழுந்தது.
அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேர் என்ன ஆனார்கள்? என்பது பற்றிய
தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய
அரசு அறிவித்தது. ஆனால், விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இதற்கிடையில் பிரான்ஸின் லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால்
பகுதி மாயமான விமானத்தினுடையது தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மின்டானோ தீவில் தெற்கு
உபியான் டாவி-டாவி என்ற இடத்தின் அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள
காட்டுப்பகுதியில் 70 அங்குல நீளமும், 35 அங்குல அகலமும் கொண்ட மலேசிய
நாட்டுக்கொடியுடன் கூடிய ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த விமான பாகத்தில் பல எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், சீட் பெல்ட்டுடன்
விமானி எலும்புக்கூடாக இருக்கையில் அமர்ந்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள்
கூறுகின்றனர்.
பறவைகளை வேட்டையாட அந்த பகுதிக்கு சென்ற இருவர் இந்த விமானத்தின் பாகம்
கிடைத்த தகவலை உள்ளூர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு
விரைந்து சென்ற போலீஸார் விமானத்தின் பாகம் விழுந்து கிடக்கும்
பகுதியைச்சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக, மலேசிய நாட்டில் உள்ள சபா மாகாண போலீஸாருக்கும் தகவல்
அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விமானப்போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும்
தகவல் பரிமாறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கவனித்து விசாரணை நடத்துமாறு
அவர்களுக்கு மலேசிய நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரி லியோவ் ஐயாங் லாய்
உத்தரவிட்டுள்ளார்.